Thursday, August 14, 2014

தமிழ்ப் பண்பாட்டில் இரண்டறக் கலந்த ஒன்று "மஞ்சள்"!

தமிழ் பெண்களின் பழக்கவழக்கங்களில் மிகவும் முக்கியமான ஒன்று முகத்திற்கு மஞ்சள் பூசுவது. 

மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுப் பெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திருநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று, மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழ்ப் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.


மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால் அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு.


மருத்துவகுணம்

மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.
மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கொல்லப்படும் வைரஸ்

மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மகிமை

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகு தரும் மஞ்சள்

அ. தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

ஆ. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.

இ. பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.

ஈ. எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

உ. பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புக்கள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.

ஊ. சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

எ. தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும்.

ஏ. மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்….! 

ஐ. முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.


மஞ்சள் பூசுங்க!

இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்..

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். 


பண்டைய காலத்திலேயே எந்த படிப்பும் இல்லாமல் நிபுணனாக வாழ்ந்தவன் தமிழன்....!!!





No comments :

Post a Comment